இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider

செவ்வாய், 17 டிசம்பர், 2013

வெற்றி ஆண்களுக்கு மட்டுமல்ல - சாதித்துக் காட்டிய ஸ்ரீவித்யா பிரியா

வெற்றி ஆண்களுக்கு மட்டுமல்ல - சாதித்துக் காட்டிய ஸ்ரீவித்யா பிரியா

“எதுல இருந்து ஆரம்பிக்கட்டும்? கொஞ்சம் வித்தியாசமா என் கல்யாணத்துல இருந்து தொடங்கட்டுமா?” - கலகலப்புடன் கேட்கிறார் வித்யா. சென்னை, பாரீஸில் இருக்கும் அவருடைய அலுவலகத்தில் பரபரப்புகளுக்கு நடுவில் எதையுமே பொறுமையுடன்தான் அணுகுகிறார். குறுக்கீடுகளைக்கூட இன்முகத்துடன் எதிர்கொள்கிறார். சென்னை வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் கவர்னர் கையால் வாங்கிய விருதுகள் மேஜைக்குப் பின்னால் இருக்க, தன் முன்னால் இருக்கும் சவால்கள் குறித்துப் பேசுகிறார் வித்யா.
“எங்களோடது பெற்றோர் சம்மதிக்காத காதல் திருமணம். என் கணவர் பாலச்சந்திரன், டிரான்ஸ்போர்ட் பிசினஸ்ல இருக்கார். அவர் வீட்ல சம்மதம் கிடைச்சாலும், என் வீட்டில் ஏத்துக்கவே இல்லை. நாங்க பரம்பரை பணக்காரர்கள் கிடையாது. கணவரோட வருமானம் போதவில்லை. காலேஜ்ல நான் படிச்ச பொருளாதாரமும், வாங்கின கோல்டு மெடலும் வாழ்க்கையில எந்த மாற்றத்தையும் பண்ணலை. படிச்சதுக்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த ஷிப்பிங் கம்பெனியில வேலைக்குப் போனேன். பெரிய பதவி எல்லாம் இல்லை. சாதாரண வேலைதான். கொடுத்த வேலையை, நிறைவா செய்தேன். மூத்த மகன் பிறந்தான். அவனைப் பார்த்தாலாவது எங்க வீட்டோட கோபம் தீரும்னு என் பிறந்த வீட்டுக்குப் போனேன். கைக்குழந்தையோட வாசல்ல நின்ன என்னைப் பார்த்து, ‘நாங்க இன்னும் இருக்கோமா, செத்துட்டோமான்னு பார்க்க வந்தியா’ன்னு கேட்டாங்க. ஏற்கனவே உடைஞ்சு போயிருந்த என்னை மொத்தமா நொறுக்கிப்போட அந்த வார்த்தைகளே போதுமானதா இருந்தது. சரி, எல்லாத்துக்கும் இன்னொரு பக்கம் இருக்கும் இல்லையா? அவங்க நிலையில நின்னுப் பார்த்தா அவங்க அப்படி நடந்துக்கறதும் சரிதானே” என்று பெற்றவர்களை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் வித்யா.
வீட்டின் வறுமையை எப்பாடுபட்டாவது சமாளித்தாக வேண்டும் என்ற உத்வேகம்தான் அவரை ஒரு நிறுவனத்தின் முதலாளியாக உயர வைத்திருக்கிறது.
“ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட வீட்டுல 400 ரூபாய் வாடகைக்குக் குடியிருந்தோம். வீட்டுச் செலவு, குழந்தைங்க படிப்புன்னு செலவு மட்டும் அதிகமா இருக்கும். வரவுக்கு எங்கே போறது? என் கணவர் வேலை பார்த்த நிறுவனம் நஷ்டத்துல இயங்கினதால அதை மூடிட்டாங்க. என்ன செய்யறதுன்னே தெரியலை.
“நான் செய்துகிட்டு இருந்த வேலையை விட்டுட்டு சொந்தமா தொழில் தொடங்கலாம்னு முடிவு செய்தேன். என்னோட வேலை பார்த்த நாலு பேர், பங்குதாரர்களா சேர்ந்தாங்க. முதல் போட என்கிட்டே பணம் இல்லாததால ஆரம்பத்துல நான் வொர்க்கிங் பார்ட்னராதான் சேர்ந்தேன். எங்களுக்குத் தெரிஞ்சது லாஜிஸ்டிக்ஸ்தானே. அந்தத் தொழிலையே தொடங்கினோம். தொழில் இடத்துல பிரச்சினைகள் சகஜம்தானே. அதனால பங்குதாரர்கள் விலகிட்டாங்க. நானும் இன்னொருத்தரும் மட்டும் தொழிலைத் தொடர்ந்து நடத்தினோம். கடைசியில அவங்களும் விலகிட, நான் தனியாளா நின்னேன்” என்று சொல்கிற வித்யாவுக்கு அதற்கடுத்து ஏறுமுகம்தான்.
சவால்களைச் சமாளித்தேன்
“கப்பல், விமானம் போன்றவற்றில் வரும் சரக்குகளை உரியவரிடம் சேர்ப்பதுதான் எங்கள் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் வேலை. பொதுவா பரம்பரையா இந்தத் துறையில இருக்கறவங்கதான் இங்கே அதிகம். அவங்களுக்குத்தான் நிறைய வாடிக்கையாளர்கள் இருப்பாங்க. ஏன்னா அதிகமான பணம் புழங்கற, அதே சமயம் ரிஸ்க் நிறைந்த தொழிலும்கூட. நான் என்னோட கம்பெனிக்கு ஆர்டர் பிடிக்க எத்தனையோ கம்பெனிகள் ஏறி, இறங்கியிருக்கேன். என்னை நம்பி ஆர்டர் தர பலர் யோசிச்சாங்க. ஆனா சிலர் வாய்ப்பு தரவும் செய்தாங்க. அதைத் தடுக்க எத்தனை போட்டி தெரியுமா? நிறைய இடையூறுகள், தொந்தரவுகள். சமயங்கள்ல முக்கியமான டாக்குமெண்ட்ஸ் காணாமல் போயிடும்.
ஆண்கள் மட்டுமே நிலைச்சிருக்கும் இந்தத் துறையில என்னோட வரவை அத்தனை சீக்கிரம் யாருமே ஏத்துக்கலை. சிலர் என்னோட நடத்தையைக்கூட கேள்விக்குள்ளாக்கினாங்க. நான் உடைஞ்சுபோய் இந்தத் துறையில இருந்து விலகணும்கறதுதான் அவங்க நோக்கம். அப்படி நான் பின்வாங்கிட்டா, அவங்க ஜெயிச்சா மாதிரி ஆகிடுமே. எதைப் பத்தியுமே கவலைப்படாம என் கொள்கையில உறுதியா நின்னேன். இப்போ ஐ.டி.சி. மாதிரியான பெரிய பெரிய நிறுவனங்கள் என் வாடிக்கையாளரா இருக்கறது எனக்குப் பெருமையா இருக்கு” என்று சொல்லும்போதும் அவரது வார்த்தைகளிலோ, முகத்திலோ பெருமிதத்தின் சுவடு துளிக்கூட இல்லை.
வெற்றி ரகசியம்
“கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு மேல இருக்கற எங்கள் துறையில் நான் மூன்றாவது இடத்துல இருக்கறதா சேம்பர் ஆஃப் காமர்ஸ்ல இருந்து போன் வந்தப்போ நான் நம்பவே இல்லை. பரிசு வாங்கின அந்த நொடி எனக்கு இன்னும் சாதிக்கணும்கற உத்வேகத்தைக் கொடுத்துச்சு. குரூப் போட்டோவுக்கு நின்னப்போ அந்த குழுவில் நான் மட்டும்தான் பெண் என்பது தெரிஞ்சது. அது என் தன்னம்பிக்கையை அதிகரிச்சது. இப்போ ‘வீ வின் லாஜிஸ்டிக்ஸ்’னு இன்னொரு கம்பெனி துவங்கியிருக்கோம். நானும் என் பணியாளர்களும் அதுக்கான வேலைகளில் மும்மரமா இருக்கோம். காரணம் அவங்க பங்களிப்பு இல்லாம இந்த வெற்றி சாத்தியம் இல்லை” என்று தன் ஊழியர்களை உயர்த்திப் பேசுகிறார் வித்யா. தோல்வியில் துவளாத, வெற்றியில் துள்ளாத இந்த மனநிலைதான் வித்யாவின் வெற்றி ரகசியம்!

வெற்றி தந்த வெயிலுக்கு நன்றி

வெற்றி தந்த வெயிலுக்கு நன்றி


வேலூரின் சிறப்புகளில் ஒன்று என்னத் தெரியுமா? வருடத்தின் ஒன்பது மாதங்களும் வெயில் வாட்டியெடுக்கும். அந்த வெயிலையே தன் தொழிலுக்கான அச்சாணியாகப் பயன்படுத்தியிருக்கிறார் வேலூரைச் சேர்ந்த லாவண்யா பாலாஜி. தாகத்துக்குத் தண்ணீரைவிட குளிர்பானங்களையே இன்று பலர் நாடுகிறார்கள். மக்களின் அந்த மனநிலைதான் இவரைக் குளிர்பானத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கத் தூண்டியிருக்கிறது. இவர்களது நிறுவனத் தயாரிப்பில் உருவான குளிர்பானங்கள், இன்று நகரின் முக்கியக் கடைகளில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. கல்லூரி பேராசிரியராக இருந்தவர், தொழில்முனைவோராக மாறியதற்குப் பின்னால் குடும்பமும், தன்முனைப்பும் இருப்பதாகச் சொல்கிறார்.
“திருமணத்துக்குப் பிறகு நான் சென்னையில்தான் இருந்தேன். அப்போது கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். என் கணவருக்கு மென்பொருள் நிறுவனத்தில் வேலை. அவருக்கு வேலூருக்குப் பணிமாறுதல் கிடைத்ததால் குடும்பத்துடன் இங்கே வந்துவிட்டோம். பொதுவாக வேலூரின் வெயிலைக் கண்டு பலரும் பயப்படுவார்கள். எங்களுக்கு என்னவோ அதிகமான வெயிலும், குளிரும் பிடித்துவிட்டது. அதனால் இங்கேயே நிரந்தரமாகக் குடியேறினோம். இங்கேயும் கல்லூரி பணி தொடர்ந்தது. என் இரண்டாவது குழந்தை பிறந்தபோது பணியைத் தொடரமுடியாமல் போனது” என்று முன்கதை சுருக்கம் சொல்கிறார் லாவண்யா.
கைகொடுத்த தொழில் மையம்
குழந்தை ஓரளவுக்கு வளர்ந்தாலும் தொடர்ந்து வேலைக்குச் செல்ல முடியாத சூழல். அதற்காக வீட்டை மட்டும் நிர்வகிப்பதோடு தன் எல்லையைச் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை லாவண்யா. தன் திறமையை நிரூபிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். தன் நினைப்பைப் பலரிடமும் கேள்வியாகக் கேட்டிருக்கிறார். அப்போது லாவண்யாவின் மாமனார்தான், தொழில்தொடங்கச் சொல்லி உற்சாகம் அளித்திருக்கிறார்.
“என் மாமனார் வீட்டில், சிறு அளவில் குளிர்பானங்கள் தயாரித்து விற்பனை செய்தார்கள். அதையே நான் பெரிய அளவில் செய்யலாம் என்று நினைத்தேன். என் கணவரும், மாமனாரும் எனக்குத் துணை நிற்க, தொழில் தொடங்குவது என்று முடிவெடுத்தேன். குளிர்பானத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க லட்சக் கணக்கில் பணம் வேண்டுமே. என்னச் செய்வது என்று யோசித்தபோது, மாவட்டத் தொழில் மையம் எங்களுக்குக் கைகொடுத்து உதவியது. மாவட்டத் தொழில் மையத்தை அணுகியபோது, பட்டதாரிகளுக்கு என்னவிதமான கடனுதவித் திட்டங்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள். முதல்கட்டமாக மாவட்டக் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் சந்திப்பு இருக்கும் என்று சொன்னார்கள். அதன்படி நான் கலெக்டரையும், அதிகாரிகளையும் சந்தித்து ஒப்புதல் வாங்கினேன். அதன் பிறகு ஒரு மாதம் பயிற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அந்தப் பயிற்சி, என் ஆர்வத்துக்கு உரமிட்டது” என்கிறார் லாவண்யா.
லாவண்யா, படம் : வி.எம்.மணிநாதன்
வழிகாட்டிய தொழில்முனைவோர்கள்
ஒரு மாதம் நடந்த பயிற்சியில் பலதுறை நிபுணர்களும் பங்கேற்றுப் பேசியிருக்கிறார்கள். தொழில்தொடங்கி வெற்றி பெற்றவர்களுடன் கலந்துரையாடலும் நடந்திருக்கிறது. அதுதான், ‘என்னால் முடியுமா?’ என்ற லாவண்யாவின் தயக்கத்தைத் தகர்த்திருக்கிறது. கடனுதவி கிடைப்பதற்கு முன்னரே தொழிற்சாலை தொடங்குவதற்கான இடம், பணியாளர்கள், விற்பனை என்று சகலத்தையும் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து திட்டமிட்டிருக்கிறார் லாவண்யா. குளிர்பானத் தயாரிப்பு ஃபார்முலாக்களில் இவருடைய மாமனாரின் பங்கு அதிகம் இருந்ததாகச் சொல்கிறார்.
வரவேற்ற வாடிக்கையாளர்கள்
“உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனக் குளிர்பானங்களுக்கு மத்தியில் எங்கள் தயாரிப்பு செல்லுபடியாக வேண்டும் என்றால் அது மிகப்பெரும் சவால்தானே? தரத்திலும் சுவையிலும் புதுமையைக் கூட்டினால்தான் அது சாத்தியமாகும் என்று புரிந்தது. குளிர்பானங்கள் இயற்கை மணத்துடனும் சுவையுடனும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். நம் மண்ணின் பானமான சோடா கலர் சுவையுடன் அது பொருந்திப் போகிற மாதிரியும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
உண்ணும் பொருள் என்பதாலேயே எதையுமே இரு மடங்கு பரிசோதனைக்குப் பிறகுதான் செயல்படுத்தினோம். என் மாமனாரின் தொழில்நுட்ப அறிவுடன் என் கணவரின் மார்க்கெட்டிங் அறிவும் எனக்குப் பக்கப் பலமாக இருந்தன” என்று சொல்கிற லாவண்யா, நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள, அவருடைய கணவர் பாலாஜி ராஜா, வர்த்தகத்தைக் கவனித்துக் கொள்கிறார். ஆரம்பத்தில் கடைகளை அணுகுவதே சிரமமாக இருந்தது என்கிறார் லாவண்யா.
“புதுத் தயாரிப்பு என்பதாலேயே பல கடைகளில் எங்கள் குளிர்பானங்களை வாங்க யோசித்தார்கள். ஆனால் ஒருமுறை வாங்கிய வாடிக்கையாளர்கள், அடுத்தமுறையும் கேட்கத் தொடங்கியதால் எங்களுக்கு அதிகமாக ஆர்டர் வந்தது. இன்று ஆற்காடு முதல் குடியாத்தம் வரை கிட்டத்தட்ட இரண்டாயிரம் கடைகளுக்கு எங்கள் குளிர்பானங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
வேலூர் நகரின் முக்கியக் கடையில்தான் நான் மாதா மாதம் மளிகைப்பொருள்கள் வாங்குவேன். அங்கே வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு மத்தியில் எங்கள் தயாரிப்பைப் பலர் விரும்பி கேட்டு வாங்கிச் செல்வதைப் பார்க்கும்போது பெருமிதமாக இருக்கும். இதுபோன்ற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு உழைக்கிறோம், நிச்சயம் வெற்றியும் பெறுவோம்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் லாவண்யா.