இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider

திங்கள், 12 மே, 2014

சாதிக்கும் கல்லூரி மாணவர்கள்!

சாதிக்கும் கல்லூரி மாணவர்கள்!
இரண்டு பார்ட்னர்கள் இருந்தாலே பிசினஸில் பல பிரச்னைகள் வர, சென்னையில் பல கல்லூரிகளைச் சேர்ந்த 16 மாணவர்கள் சேர்ந்து ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை (Event Management Company) நடத்தி வருகிறார்கள்.
இளவயதில் ஈகோவுக்கு அதிக முக்கியத்துவம் தருகிற பருவத்தில் எப்படி இது சாத்தியம் என இந்த கம்பெனியைத் தொடங்கிய ராகவேந்திரா கூறியது
''ஒரு சராசரியான மாணவனின் வாழ்க்கையை நான் விரும்பவில்லை. புதிதாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே எனக்குள் ஓடிக்கொண்டேதான் இருக்கும். 12-ம் வகுப்பு முடித்தவுடன் கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பைத் தேர்வு செய்தேன். கல்லூரியில் சேர்ந்தவுடன் எனக்குள் இருந்த எண்ண ஓட்டம் அதிகமானது. என் நண்பர்கள் வினீத் ரமேஷ் மற்றும் ஸ்ருதன்ஜெய் நாராயண் ஆகிய இருவரிடமும் இந்த எண்ணம் இருந்தது. எனவே, நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து ஒரு தொழில் செய்ய முடிவெடுத்தோம்.
சென்னையில் நிகழ்ச்சிகளுக்குப் பஞ்சம் இல்லை. மாதந்தோறும் ஏதாவது நிகழ்ச்சிகளும் விழாக்களும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஏன் ஒரு நிகழ்ச்சியை நடத்தித் தரும் கம்பெனியை நடத்தக்கூடாது என்ற எண்ணம் எங்கள் மூன்று பேரிடமும் தோன்றியது. உடனடியாக நாங்கள் மூன்றுபேரும் சேர்ந்து 'அயாமரா’ என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தும் கம்பெனியை தொடங்கினோம்.
ஒரு நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தவும் திட்டமிடவும் நாங்கள் மூன்று பேர் மட்டும் போதுமானதாகத் தெரியவில்லை. எனவே, எங்கள் புதுமுயற்சிக்கு வலுசேர்க்க பல கல்லூரிகளிலிருந்து சகமாணவர்களைச் சேர்த்துக்கொண்டோம். ஆகஸ்ட் 2012-ல் சென்னையில் 'மெட்ராஸ் டே’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. துப்புகளை வைத்துக்கொண்டு காரின் மூலம் இடங்களைக் கண்டுபிடிக்கும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி அது.
எங்கள் கம்பெனியைப் பற்றி கேள்விப்பட்ட அந்த அமைப்பினர் எங்களை இந்த நிகழ்ச்சியை நடத்தித் தருமாறு கேட்டனர். அதற்கான பணத்தையும் முன்கூட்டியே கொடுத்தனர்.
நாங்கள் மொத்தம் 16 பேர். கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளாதாரம், உளவியல் எனப் பல துறைகளில் படித்துக்கொண்டிருந்தோம். இதுவே எங்களை ஒரு நிகழ்ச்சியைப் பலகோணத்தில் திட்டமிட மிகவும் உதவியாக இருந்தது. அதனால் நிகழ்ச்சிக்கான சிறு சிறு விஷயங்களிலும் நாங்கள் கவனம் செலுத்தினோம். எங்களுக்கு அப்போது போதுமான அனுபவம் இல்லை என்றாலும் வெற்றிகரமாக அந்த நிகழ்ச்சியை நடத்தித் தந்தோம். இந்த நிகழ்ச்சி மூலம் பொருளாதார ரீதியாகச் சம்பாதித்த லாபம் வெறும் நூறு ரூபாய்தான். ஆனால், நாங்கள் சம்பாதித்த பெயருக்கும் புகழுக்கும் அளவில்லை. இந்த நிகழ்ச்சியால் எங்கள் நிறுவனம் மக்கள் அனைவரிடமும் போய்ச்சேர்ந்தது.
முதல் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடித்தபிறகு பலபேர் எங்களைத் தொடர்புகொண்டு தங்கள் நிகழ்ச்சிகளையும் நடத்தித் தருமாறு கேட்டனர். எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்திக்கொடுக்காமல் நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுப்பதில் மிகக் கவனமாக இருப்போம். 16 பேருக்கும் முழுச் சம்மதம் இருந்தால்தான் அந்த நிகழ்ச்சியைப் புக் செய்து நடத்தித் தருவோம். நிகழ்ச்சிக்கான மார்க்கெட்டிங்கில் ஆரம்பித்து டிக்கெட் புக்கிங் வரை அனைத்து வேலைகளையும் நாங்களே பார்த்துக்கொள்வோம்' என்றார் ராகவேந்திரா.
சதீஷ்பாபு என்பவர் பேசும்போது 'கம்பெனியைப் பொறுத்தவரை, நாங்கள் 16 பேரும் பார்ட்னர்கள்தான். முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடு எங்களிடம் இல்லை. வரும் லாபத்தை இதுவரை யாரும் பிரித்துக்கொள்ளவில்லை; கம்பெனியின் வளர்ச்சிக்காகவே இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம். சொந்தமாக ஒரு மிகப் பெரிய நிகழ்ச்சியை நடத்துவதே எங்களது தற்போதைய எண்ணம். அதற்காகத்தான் இப்போது உழைத்து வருகிறோம்' என்றார்.
இந்தக் குழுவின் பெண் உறுப்பினர் காயத்ரி பட்டானி. அவருடன் பேசினோம். 'நான் டபிள்யூசிசி கல்லூரியில் உளவியல் மூன்றாமாண்டு படித்து வருகிறேன். குழுவாகச் சேர்ந்து பணியாற்றும்போது, புதிய புதிய விஷயங்களை எங்களால் கற்றுக்கொள்ள முடிகிறது. தொழில் ரீதியான அனுபவங்கள் எங்களுக்கு நடைமுறை வாழ்வியலை கற்றுத் தருகின்றன. ஆரம்பத்தில் தடுமாறினாலும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேறி வருகிறோம்'' என்றார் அவர்.
இந்த நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் திருவேங்கடம். அவர், ''கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, சுயமாகத் தொழில் ஆரம்பித்தாலும் அல்லது ஒரு நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றாலும் அங்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும், தொழில்ரீதியாக ஏற்படும் இடர்பாடுகளை எப்படிச் சமாளிக்கவேண்டும் என்று எங்களின் நிறுவனம் எங்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளது.
எங்களின் கல்லூரிப் பருவத்திலேயே இதுமாதிரி அனுபவங்கள் எங்களுக்குக் கிடைத்திருப்பது பெரிய வரப்பிரசாதம்தான்'' என்றார்.
மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் படிக்கும் ஸ்நேஹா பாலசுப்ரமணியம், ''என்னுடைய படிப்புச் சார்ந்த தொழில் என்பதால்தான் நான் இதற்குச் சம்மதித்தேன். இதில் இணைந்ததும்தான் மற்ற நண்பர்களின் ஆர்வம் எனக்குப் புலப்பட்டது.
எங்கள் கம்பெனியை உலக அளவில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதே அனைவருக்குமான சிந்தனையாக இருக்கிறது. படிப்பதற்கும், அதையே பிராக்டிக்கலாக செய்வதற்குமான வேறுபாடுகளை இந்த பிசினஸ் செய்வதன் மூலம் கற்றுக்கொண்டேன்'' என்றார் நம்பிக்கையாக.
டி.எம்.ராஜரத்தினம் மஹால், மியூசிக் அகாடமி, ஜெர்மன் ஹால் ஆகிய இடங்களில் பல நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கும் இந்த ஜாம்பவான்கள், பாலிவுட் பிரபலமான ஃப்ரஹான் அக்தரின் இசை நிகழ்ச்சியையும் கடந்த டிசம்பர் மாதம் நடத்தி அசத்தியுள்ளனர். பதினாறு பேரும் தங்களின் பிசினஸ் வெற்றிக்கு பின்னணி, தங்கள் பெற்றோர்கள் தரும் ஊக்கம்தான் என்கிறார்கள் கோரஸாக!

சனி, 10 மே, 2014

அமெரிக்காவின், 'டைம்' பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் முருகானந்தம்

சர்வதேச அளவில் செல்வாக்கு பெற்ற 100 பேர் பட்டியலில் கோவையை சேர்ந்த முருகானந்தம்!
உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்களில் ஒருவராக அமெரிக்காவின், 'டைம்' பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் முருகானந்தம். வரும் 29ம் தேதி, அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் விருது பெறவுள்ளார். சர்வதேச அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில், இந்தியாவிலிருந்து நரேந்திரமோடி, கெஜ்ரிவால், அருந்ததிராய் போன்ற பிரபலங்களும் அடங்குவர். இவர்களுடன் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார், கோவையில் சேர்ந்த முருகானந்தம்.
அவர் சாதித்த சாதனை என்ன?
எந்த சகோதரியும் அழுக்குத் துணியை பயன்படுத்தக் கூடாது!
பெண்களுக்கான சானிடரி நாப்கின் அடிமட்ட ஏழைப் பெண்களுக்கும் போய்ச்சேரும் அற்புதத்தை நிகழ்த்தியவர் முருகானந்தம். ஆனால், இதற்கு இவர் கொடுத்த விலை... நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அவருடைய வார்த்தைகளிலேயே படிப்போம்!
'என் ஊர் பாப்பநாயக்கன்புதூர். அப்பா நெசவுத் தொழிலாளி. அம்மா விவசாயக் கூலி. எனக்கு ரெண்டு தங்கச்சிங்க. திடீர்னு ஒருநாள் அப்பா இறந்துட்டார். குடும்பமே இடிஞ்சு போயிடுச்சு. வீட்டின் வறுமையைப் போக்க கிரில் பட்டறைக்குப் போனேன். அங்க புதுசு, புதுசா நிறைய முயற்சி பண்ணினேன். அம்மா வாசல்ல போடுற கோலத்தை வீட்டு ஜன்னல் ஆக்கினேன். இதனால, என் முதலாளிக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு.
ஆனா, எனக்கு ஒரு தொழில்லயே ரொம்ப நாள் ஒட்டாது. நான் கிளம்புறேன்னு சொன்னப்ப முதலாளி, 'நீயே இந்தக் கடையை வாங்கிக்கோ’னு சொல்லி பணத்துக்கு வழிகாட்டினார். கடையை எடுத்து நல்லாவே நடத்தினேன். எனக்குக் கல்யாணமும் ஆச்சு. ஒருநாள் என் மனைவி எதையோ மறைச்சி எடுத்துட்டுப் போனாங்க. என்னனு கேட்டப்ப, 'இது பொம்பளைங்க சமாச்சாரம்’னு சொல்லிட்டு விறுவிறுனு ஓடப் பார்த்தாங்க. நான் அவங்ககிட்ட இருந்து அதைப் பிடுங்கிப் பார்த்தா அழுக்கான துணி. 'ஏன் ஒரு நாப்கின் வாங்கக் கூடாதா?’னு மனைவியைத் திட்டினேன். அவங்களோ, 'அதுக்கு எல்லாம் செலவு பண்ணா குழந்தைக்குப் பால் வாங்க எங்க போவேன்’னு கேட்டாங்க. அதோட மட்டும் இல்லாம பெரும்பாலான கிராமப் பெண்கள் வசதி இல்லாததால இதுமாதிரி அழுக் குத் துணிகளைத்தான் பயன்படுத்துறாங்கனு அவங்க சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோயிட்டேன்.
அப்பதான் நாப்கினை நாமே தயாரிக்கலாமேனு எண்ணம் எழுந்துச்சு. கடையில ஒரு நாப்கினை வாங்கி, அதைப் பிரிச்சுப் பார்த்தேன். அதுல பஞ்சு மாதிரி ஒரு பொருள் இருந்துச்சு. உடனே பஞ்சை நல்லா அடைச்சு நாப்கின் தயாரிச்சேன். இதை யார்கிட்டே போய் சோதனை பண்ண முடியும். என் மனைவிகிட்ட போய் தயக்கமா நின்னேன். இப்படியே என்னோட சோதனைகள் தொடர்ந்தது. ஆனா, ஏகப்பட்ட ஏமாற்றம். ஒருகட்டத்துல என் மனைவிக்கு என் மேல ரொம்பக் கோபம்வந்து இந்த விஷயத்தை நிறுத்துங்கனு சொல்லி கண்டபடி திட்டிட்டாங்க. வேற வழி இல்லாம நான் பக்கத்துல இருந்த மருத்துவக் கல்லூரி பெண்களிடம் என் ஆராய்ச்சியைச் சொல்லி உதவி கேட்டேன். பல பெண்கள் என்னை பைத்தியக்காரன் மாதிரி பார்த்துட்டு, திட்டினாங்க. சிலர் ஒத்துழைப்புக் கொடுக்க முன்வந்தாங்க. சில வாரங்களில் அவங்களாலும் தொடர்ந்து ஒத்துழைக்க முடியலை. வேற வழி இல்லாம என்னையே சோதனை எலியாக்க முடிவு பண்ணினேன்.
என் நண்பரின் கறிக் கடையில் இருந்து சூடான ரத்தத்தை வாங்கிட்டு வந்து இடுப்பில் ஃபுட்பால் பிளாடரில் நிரப்பிக்கிட்டேன். நடுவில சின்னக் குழாய் மூலமா நாப்கினை நோக்கி இணைச்சுக்கிட்டேன். பிளாடரை அழுத்தினா ரத்தம் நாப்கினில் விழும். இந்த நாப்கினுக்காகப் பலவிதமான பஞ்சுகளை வெச்சுப் பரிசோதிச் சேன். இந்தச் சோதனையில் என் வேட்டி எல்லாம் ரத்தம் கொட்டினது. ஒரு மணி நேரத்தில் தாங்க முடியாத நாற்றம் வரும். இதைப் பார்த்து எனக்கு ஏதோ பால்வினை நோய் இருக்குனு ஊர்ல தகவல் பரவிடுச்சு. என் மனைவி கோவிச்சுக்கிட்டு என்னைவிட்டு நிரந்தரமாப் பிரிஞ்சுப்போயிட்டாங்க!
சோதனைக்காக என் பட்டறையில் இருந்த கடைசி ஸ்கிராப் வரைக்கும் வித்துட்டேன். ஆனாலும், எனக்கு நம்பிக்கை மட்டும் போகலை. சில பெண்கள் உபயோகப்படுத்தின நாப்கின்களைச் சேகரிச்சு, அதை வீட்டுல காயவெச்சு சோதனை செஞ்சேன். என் அம்மா இதைப் பார்த்து எனக்கு யாரோ சூனியம் வெச்சுட்டாங்கனு தனியா போயிட்டாங்க. ஊர்க்காரங்க எல்லாம் சேர்ந்து என்னை ஊரைவிட்டு விலக்கிவெச்சுட்டாங்க.
கண்ணீரோட நான் என் கிராமத்தைவிட்டு கிளம்பினப்ப, என் கூடவந்த ஒரே ஜீவன் நான் வளர்த்த நாய் மட்டும்தான். அதோட கோவைக்கு கிளம்பி வந்துட்டேன். ரூம் பிடிச்சுத் தங்கி வெறும் பிரெட் மட்டும் சாப்பிட்டு ஓயாம உழைச்சேன். அப்புறம்தான் வெளிநாட்டு கம்பெனிக்காரன் பயன்படுத்தறது ஃபைன் மரப் பஞ்சுனு தெரிஞ்சுது. அதைக்கொண்டு நாப்கின் தயாரிக்கிற இயந்திரம் எட்டுக் கோடி ரூபாய் ஆகும்னு சொன்னாங்க.
நான் ஃபைன் மரப் பஞ்சை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி பண்ணினேன். சுமார் ஆறு மாசம் ரெண்டு மணி நேரம் மட்டுமே தூங்கி, கஷ்டப்பட்டு ஒரு இயந்திரத்தைத் தயாரிச்சுட்டேன். இதுக்கு 65 ஆயிரம் செலவாச்சு. இயந்திரத்தைத் தயாரிச்சு முடிச்சப்ப என் கையில் ஒரு பைசா இல்லை. சேமிப்பு, இருந்த சொச்ச சொத்து எல்லாத்தையும் இழந்துட்டேன். ஆனா, அதுல தயாரிச்ச ஒரு நாப்கினை ஒரு கல்லூரி பொண்ணு பயன்படுத்திட்டு, 'அண்ணா, இதை யூஸ் பண்ற மாதிரியே எனக்குத் தெரியலை. ரொம்ப வசதியா இருக்கு’னு சொன்னப்போ கதறி அழுதுட்டேன்.
அது என் பல வருஷக் கனவு. அதுக்காக நான் என் வாழ்க்கையையே இழந்திருக்கேன். தகவல் பரவி நிறையப் பேர் இந்த இயந்திரத்தைத் தயாரிக்கச் சொல்லி ஆர்டர் கொடுத்தாங்க. நான் தயாரிச்ச இயந்திரம் மூலமாப் பெண்களே சுலபமா நாப்கினைத் தயாரிக்க முடியும். ஒரு நாப்கின் விலை ஒரு ரூபாய்தான்.
சமீபத்துல ஐ.ஐ.டி., 'சமூக மாற்றத்துக்கான சிறந்த கண்டுபிடிப்பு’ என் கண்டுபிடிப்பைத் தேர்வு செஞ்சது. ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ. இங்க எல்லாம் போய் சிறப்பு விருந்தினராகப் பேசி இருக்கேன். ரத்தன் டாடா, நாராயணமூர்த்தி ஆகியோரும் என் திட்டத்துக்கு உதவ முன்வந்து இருக்காங்க. என்னோட நோக்கம், இந்தியாவுல இருக்கிற அத்தனை ஏழைப் பொண்ணுங்களுக்கும் என் கண்டுபிடிப்பு போய் சேரணும். இனி எந்த சகோதரியும் மாதவிடாய் காலங்கள்ல அழுக்குத் துணியைப் பயன்படுத்தக் கூடாது...'' -
எல்லோரும் ஒரு நல்ல தொழில்முனைவோர் ஆக வேண்டும்